முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவர் டுவிட்டரில் செய்த பதிவு ஒன்று கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குபவர் விரேந்தர் சேவாக். இவர் களத்தில் ஆடும் பொழுது, எதிரில் பெரும்பாலும் இவருடன் இணைந்து விளையாடுவது, சச்சின் டெண்டுல்கர் தான். சேவாக் பந்தை அடித்த பிறகு, ரன் எடுப்பதற்கு ஏறினாலோ, குரல் கொடுத்தாலோ எதிரில் இருக்கும் சச்சின் இவரை நம்பி ஓடி வர மறுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து டுவிட்டரில் சேவாக்கை பின் தொடரும் ஒருவர் கேள்வி எழுப்பியதாவது, “நீங்கள் களத்தில் ஆடும் பொழுது, உங்களுக்கு எதிரில் இணைந்து விளையாட யார் இருந்தால் உங்களுக்கு விருப்பம்” என்றார். அதற்கு சேவாக் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அவர் கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது, ”நான் பெரிதும் நேசிக்கும் என் மனைவி தான் என் விருப்பம். என்னை நம்பி நான் கூப்பிட்ட குரலுக்கு எந்த யோசனையும் இல்லாமல் ஓடி வருவாள்” என்றார்.
2004 ஆம் ஆண்டு, டெல்லியை சேர்ந்த ஆர்த்தி அஹலாவத் என்பவரை சேவாக் திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.