விடுதியில் தங்கியிருந்த 9ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை..! காரணம் யார்? – போலீஸார் தீவிர விசாரணை!

Prasanth Karthick
வியாழன், 11 ஜனவரி 2024 (10:43 IST)
பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் சிறுமி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் அங்குள்ள பள்ளிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சமீபத்தில் சிறுமி வயிற்று வலியால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

உடனடியாக அவரை சிக்பள்ளாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி முழுமாத கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலியால் துடிப்பதாகவும் டாக்டர்கள் கூறியது விடுதி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றேடுத்த நிலையில் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுமியிடம் விசாரித்தபோது அவர் கர்ப்பத்திற்கு யார் காரணம் என கூறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் மேற்கொண்டு விசாரணைகளை தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்