பிகாரில், 'நாய் பாபு, S/o, குட்டா பாபு' என்ற பெயரில் ஒரு நாய்க்கு, அதன் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிகார் அரசியலிலும், சமூகத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பிகாரில் பாட்னா அருகே உள்ள மசௌரியில், ஆர்டிபிஎஸ் இணையதளத்தில் ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட இருப்பிட சான்றிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில், தந்தையின் பெயர் குட்டா பாபு, தாய் குட்டியா தேவி என்றும், புகைப்படம் இருக்கும் இடத்தில் நாயின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. வீட்டு முகவரியும் இடம்பெற்றுள்ள இந்த சான்றிதழில், வருவாய்த் துறை அதிகாரியின் டிஜிட்டல் கையெழுத்தும் உள்ளது. இந்த இருப்பிட சான்றிதழ் உண்மையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய் பாபுவுக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த சிறிது நேரத்தில், அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விண்ணப்பதாரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், கணினி இயக்குநர் மற்றும் சான்றிதழ் வழங்கியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.