நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாதரத்துறை விளக்கம்..!

Siva

திங்கள், 28 ஜூலை 2025 (08:00 IST)
தமிழகத்தில் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டதாக ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில், இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். நாய்கள் கருணை கொலை தொடர்பாக எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்தான் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு 'ஏபிசி திட்டம்' (Animal Birth Control - ABC) என்ற பெயரில் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்படும்.
 
ஏபிசி திட்டத்தின் ஒரு பகுதியாக, புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஒரு நாயை பரிசோதித்த பின்னரே, கால்நடை மருத்துவர் அந்த நாயை கருணைக் கொலை செய்ய முடியும். இந்த நடைமுறை 2023 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.
 
நாய்களை துன்புறுத்தாமல், 'அனஸ்தீசியா' கொடுத்து, அதன் இதயத் துடிப்பை இழக்க செய்யும் முறைதான் கருணைக்கொலையில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வழிமுறை மத்திய அரசின் விதிமுறைகளின்படி பின்பற்றப்படுகிறது.
 
எனவே, தமிழகத்தில் புதிதாக நாய்களை கருணைக் கொலை செய்வது குறித்து எந்த புதிய உத்தரவும் அல்லது அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்