பீகாரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்வதில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டி வந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு, இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின்போது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
எந்தவொரு ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும் என்ற போதிலும், இந்த ஆவணங்களை நிராகரிக்க கூடாது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், ஆவணங்களில் ஏதேனும் சந்தேகம் அல்லது பிரச்சனை இருந்தால், சம்பந்தப்பட்ட தனிநபருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.
ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த உத்தரவுகள் மூலம், பீகாரில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு வாக்களிக்க ஒரு புதிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.