எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் இருந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு அந்த அணி எப்போதுமே பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் ஒரு சமநிலையைப் பேணாததேக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இந்த முறை ஐபிஎல் தொடரை மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளனர். இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் நான்கில் வென்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. இந்த முறை அந்த அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூருவின் சொந்த மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதுவரை இந்த சீசனில் பெங்களூரு அணி தங்கள் உள்ளூர் போட்டியில் வெற்றி பெறவே இல்லை. அதனால் இந்த போட்டியிலாவது வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அந்தணி ரசிகர்களுக்குள் எழுந்துள்ளது.