இந்தியா கலாச்சாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என பெருமையாக பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன். என்று இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.
மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், “மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள, இந்திய நாட்டு சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த சட்டத்தை அரசாங்கம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேதனை.
பணமில்லா பரிவர்த்தனை, கறுப்புப் பண ஒழிப்பு என்றெல்லாம் பேசுகிறார்கல். டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள். ஆனால் மனித கழிவை மனிதர் அள்ளுவது தொடர்கிறது. இந்த காலகட்டத்தில் நாம் முதலில் மனித மனங்களில் உள்ள அழுக்கை அகற்றவதை பற்றி யோசிக்க வேண்டும்.
இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாச்சாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என பெருமையாக பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்.
இது நாகரீகமற்ற நாடு. மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்.? அரசாங்கம் தானே நம்மை இழிவான வேலையை செய்யும்படிச் சொல்கிறது. இந்த விஷயத்தில் ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கிறது.
மனிதக்கழிவை அகற்றுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை அரசே அமல்படுத்த மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். வேறு யாராவது பேசுகிறார்களா? தனித்தொகுதியில் வெற்றி பெற்று சென்றவர்கள் யாராவது இதைப்பற்றி பேசினார்களா? இதை யாரும் பேச மாட்டார்கள்.
சாப்பாட்டிற்காகத்தானே இந்த வேலையை செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம். ஆம், இந்த வேலையை செய்ய மாட்டோமென்று எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும்.