விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்! – தனிப்படை போலீஸ் தேடுவதால் தலைமறைவு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (09:12 IST)
கிராம சபை கூட்டத்தில் குறைகளை சொல்ல வந்த விவசாயியை ஊராட்சி செயலாளர் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் கிராமத்திலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சு ஒன்றிய அதிகாரிகள், மன்ற தலைவர், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயி கிராம சபை கூட்டத்தை வெவ்வேறு இடங்களில் நடத்த வேண்டும் எனவும், ஊராட்சி செயலாளர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனால் கோபமான ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த அம்மையப்பனை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தங்கபாண்டியனின் இந்த செயல் குறித்து மான்ராஜ் எம்.எல்.ஏ நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தங்கபாண்டியனை ஊராட்சி செயலாளர் பதிவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வன்னியம்பட்டி போலீஸார் தங்கபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கபாண்டியனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்