திலீபன் மகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (08:13 IST)
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாகவும், இந்த கொலையில் பாஜகவை சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் முகநூலில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன்.


 
 
கருப்பு முருகானந்தம் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் திலீபன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வெளியே வந்த திலீபன், சுவாதி கொலையின் குற்றவாளிகள் யார் என்பதை தெரியப்படுத்துவேன் எனவும், இந்த கொலை குறித்த ரகசியங்களை இன்னும் சொல்லுவேன் எனவும் தைரியமாக கூறினார்.
 
இந்நிலையில் நேற்று திருவாரூர் நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் திலீபன் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து வழக்கறிஞர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை வழக்கு குறித்து நீ பேசக்கூடாது என்று கூறியபடியே தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மயக்கமடைந்து கிடந்த திலீபனையும், வழக்கறிஞரையும் மீட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திலீபன் மகேந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்