சவூதி அரேபியாவில் கை வெட்டப்பட்ட தமிழக பெண் விரைவில் நாடு திரும்ப வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Webdunia
சனி, 24 அக்டோபர் 2015 (20:17 IST)
சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவரின் கை வெட்டப்பட்ட விவகாரத்தில் இந்தியா அரசு தலையிட்டு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.


 
 
இது தொடர்பாக இன்று மாலை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் "சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற வேலூரை சேர்ந்த கஸ்தூரி முனி ரத்தனம் என்பவர் மிகுந்த துயரத்தில் உள்ளார். கஸ்தூரியின் நிலை மோசமாக உள்ளதால் மத்திய அரசு விரைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி அரேபியா நாடு உரிய சிகிச்சை அளித்து, நிவாரணம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
கஸ்தூரி முனி ரத்தனம் விரைவில் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு திரும்ப மத்திய வெளியுறவு துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.