தினகரன் டீமை ஆப்ரேட் செய்யும் புகழேந்தி: நான் வெளியே வந்ததும் கூட்டம் பெருசா இருக்கனும்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (12:32 IST)
அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் மல்லுக்கட்டி நிற்கின்றன. ஆனால் இடையில் தினகரன் அணி ஒன்று இருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இந்த அணி செய்ய வேண்டியதை அமைதியாக செய்துகொண்டு தான் இருக்கின்றன.


 
 
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வெளிப்படையாக தினகரனை ஆதரித்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று தினகரனுக்கு ஆதரவாக அவரது கைதை கண்டித்து பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்த பொதுக்கூட்ட அப்டேட்டை புகழேந்தி சிறையில் சந்தித்து தினகரனிடம் கூறி வருகிறார். தினகரனை சந்திக்கும் முக்கியமான நபர்களில் புகழேந்தியும் ஒருவர். ஊர் ஊராக தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டத்தையும், அதில் தினகரனுக்கு உள்ள ஆதரவு குறித்தும் புகழேந்தி சிறையில் அவரை சந்தித்து கூறியதாக தகவல் வருகிறது.
 
அவரிடம் பேசிய தினகரன், தான் இன்னும் சில தினங்களில் வெளியே வர உள்ளதாகவும், வெளியே வந்த உடன் மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என கூறியுள்ளார். எனவே அதிகப்படியான மக்களை சந்தித்து நமக்கான ஆதரவை அதிகமாக்குங்கள் என புகழேந்தி அறிவுரை கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது.
 
மேலும் தற்போது புகழேந்தி தான் தினகரன் டீமை ஆப்ரேட் செய்து வருவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையிலேயே தங்கிவிட்டார் புகழேந்தி. இதற்காக ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரெகுலராக அவரது பெயரில் ஒரு அறை இருக்கிறது. அங்கிருந்து தான் புகழேந்தி தினகரனுக்கு ஆதரவான பணிகளில் ஈடுபடுகிறார். புகழேந்தி, நாஞ்சில் சம்பத், குண்டு கல்யாண் ஆகியோர் இந்த அணியில் முக்கியமானவர்களாக உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்