கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. கவன ஈர்ப்பு தீர்மானமா?

Mahendran
சனி, 22 ஜூன் 2024 (09:30 IST)
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடத்தப்பட்டது.

உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார். நேற்று, இவ்விவகாரம் குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் கூறியும் கேள்வி நேரத்தின்போது அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  பின்னர், முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் அதிமுகவினரை சபாநாயகர் அவைக்குள் அனுமதித்த பிறகும், விவாதத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளதால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் பூகம்பமாக இன்று சட்டசபையில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்