200 நாட்களில் 595 கொலைகள்.! ஊழல் இல்லாத துறையே இல்லை..! திமுக அரசை விளாசிய இபிஎஸ்..!!

Senthil Velan
ஞாயிறு, 21 ஜூலை 2024 (14:18 IST)
தமிழ்நாட்டில் 200 நாட்களில் 595 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேட்டு உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய அவர்,  கஞ்சா போதையாலே அதிக கொலை சம்பவங்கள் நடைபெறுவதாக கூறினார்.
 
பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தமிழக அரசு தடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.  தமிழ்நாட்டில் 200 நாட்களில் 595 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாமாக முன்வந்து சரணடைந்த நபரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
 
அம்மா உணவகத்தில் ஆய்வு செய்வது போல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாடகம் நடத்தினார் என்றும் அம்மா உணவகத்தின் மீது திமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வர் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ALSO READ: இரட்டை அடுக்கு நீட் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும்.! அன்புமணி வலியுறுத்தல்..!!
 
திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சரியாக செயல்படாததால் அங்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்