ரௌடி சோட்டா ராஜனின் தண்டனை நிறுத்தி வைப்பு! ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதி..!

Mahendran
புதன், 23 அக்டோபர் 2024 (13:19 IST)
கடந்த 2001 ஆம் ஆண்டு விடுதி உரிமையாளர் கொலை வழக்கில் ரவுடி சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தண்டனையை நிறுத்தி வைத்து, ஒரு லட்ச ரூபாய் பிணையத்துடன் நீதிபதிகள் ஜாமீன் வழங்கியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி ஜெயா ஷெட்டி என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்தவர்களால் இந்த கொலை செய்தது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு நடந்த நிலையில், சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து சோட்டா ராஜனுக்கு ஜாமீன் வழங்கினர்.
 
ஆனால் மற்றொரு கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ள நிலையில், அந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சோட்டா ராஜன் திகார் சிறையில் இருந்து இப்போதைக்கு வெளியே வர முடியாது என்றும், அந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே வெளியே வர முடியும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்