பியூட்டி பார்லர் சென்று வந்த அக்கா-தங்கை மணமக்களுக்கு நிகழ்ந்த விபரீதம்.. நின்று போன திருமணம்..!

Siva
திங்கள், 24 பிப்ரவரி 2025 (11:10 IST)
திருமண தினத்தில் அக்கா-தங்கை ஆகிய இருவரும் பியூட்டி பார்லர் சென்று வரும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக, அவர்கள் இருவருடைய திருமணமும் நின்று போன சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியில், அக்கா-தங்கை இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், மணமகள்கள் இருவரும் அலங்காரம் செய்ய அழகு நிலையத்திற்கு சென்றனர். பின்னர், திருமண மண்டபத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, அவர்கள் பயணித்த கார், மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மோட்டார் சைக்கிள் பயணித்த மூன்று வாலிபர்கள், காரில் இருந்து மணமகள்களை வெளியே இழுத்து, சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த மணமகள்களின் குடும்பத்தினரும் வந்து, அந்த வாலிபர்களை தாக்கினர்.

இதனால், மூன்று வாலிபர்களும் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்து, திருமண மண்டபத்தில் புகுந்து, மணமகன்கள், அவர்களது உறவினர்கள் என அனைவரையும் தாக்கினர். இந்த அடிதடியால், திருமணம் நடக்காமல் நின்று போனது.

இதனால், அக்கா-தங்கை ஆகிய  இரு மணமகளும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு, மணமகன்களை சமாதானப்படுத்தியும், அவர்கள் திருமணம் வேண்டாம் என முடிவு செய்து, மண்டபத்தை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்