சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையைச் செயல் படுத்துவதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மற்றும் அதற்குரிய சாஃப்ட்வேரை இன்போசிஸ் உருவாக்கியுள்ளது.
இந்த வரி விதிப்பு சாஃப்ட்வேர் சோதனை ரீதியில் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்படும். ஜிஎஸ்டி-க்கென தனி இணையதளம் பிப்ரவரியில் உருவாக்கப்படும் என்று ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி சாஃப்ட்வேரை உருவாக்கும் திட்டத்துக்கான மொத்த மதிப்பு ரூ.1,380 கோடி. இந்த சாஃப்ட்வேரில் 65 லட்சம் முதல் 70 லட்சம் பேர் வரி தாக்கல் செய்யலாம். பயன்படுத்துவதற்கு எளிதாகவும், காகித பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களான எஸ்ஏபி, டாலி சொல்யூஷன்ஸ் மற்றும் கிளியர் டாக்ஸ் ஆகியவற்றுடன் ஜிஎஸ்டிஎன் அமைப்பு, அவர்களது இணையதளம் மூலம் வரி தாக்கல் செய்யும் வசதியை உருவாக்கித் தருவதற்காக பேசி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கெனவே வாட், உற்பத்திவரி, சேவை வரி செலுத்துவோருக்கும் புதிய முறைக்கு மாறுவதற்கான வழிகாட்டுதலை இந்த சாஃப்ட்வேர் அளிக்கும். ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக 15 இலக்க எண் அளிக்கப்படும். மொத்தம் 58 லட்சம் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகவும் வரி செலுத்துவோருக்கு உதவுவதற்கான ஹெல்ப் டெஸ்க் வசதியும் இருக்கும் என அறிவித்துள்ளது.