முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு; பாகிஸ்தான், நேபாளம் இரங்கல்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (08:24 IST)
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணமடைந்த நிலையில் பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பிறநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிபின் ராவத் மறைவு குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் “ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளின் விலைமதிப்பில்லா உயிர்களின் மறைவிற்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் நதீம் ராசா மற்றும் ஜெனரல் காமர் ஜாவத் பாஜ்வா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பல பாதுகாப்பு அதிகாரிகளின் சோகமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்