மழை பிடிக்காத மனிதன் பிரச்சனை பேசி முடிக்கப்பட்டது.. மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

vinoth
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (15:43 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியான அன்று இயக்குனர் விஜய் மில்டன் வெளியிட்ட ஒரு வீடியோ சர்ச்சைகளைக் கிளப்பியது.

அந்த வீடியோவில் “இந்த படத்தின் நாயகன் சென்னைக்கு வரும்போது அவன் யார் என்று தெரியாது, அவனது பின்னணி என்ன, எதற்காக சென்னைக்கு வருகிறான், அவனுடன் இருப்பவர்கள் யார் யார், அவருடைய முகத்தில் உள்ள காயத்துக்கு என்ன காரணம் என்பது எதுவுமே தெரியாமல் கேள்வியாக இந்த படத்தை இடைவேளை வரை நகர்த்திருப்பேன். ஆனால் அவன் யார் என்பதை சொல்லும் ஒரு நிமிடக் காட்சியை படத்தின் தொடக்கத்தில் சேர்த்து விட்டார்கள். இதனால் கதாநாயகன் யார் என்ற மர்மம் உடைந்துவிடுகிறது. அதனால் அந்த ஒரு நிமிடக் காட்சியை மறந்துவிட்டு படம் பாருங்கள்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையில் “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிட காட்சியை தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்துள்ளதாக என் நண்பர் படத்தின் இயக்குனர் திரு விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்து  இருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை’ என்று விஜய் ஆண்டனி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் வெளியிட்ட அறிக்கையில் “மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி குறித்து தயாரிப்பாளர்களும் இயக்குனரும் கலந்து பேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் இருந்து நீக்கிவிடுவதென முடிவு செய்துள்ளனர். இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழை பிடிக்காத மனிதன் படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்