அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

சனி, 2 ஆகஸ்ட் 2025 (16:36 IST)
இந்திய அளவில் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் உயரிய விருதாக ‘தேசிய விருதுகள்’ உள்ளன. முன்பெல்லாம் வணிக ரீதியாக இல்லாமல் கலை ரீதியாக உருவாக்கப்படும் படங்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டன. அத்தகையப் படங்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் இருந்தன. ஆனால் இப்போது அந்த விருதுகளிலும் வணிக ரீதியாக உருவாக்கப்படும் படங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் இந்தாண்டும் வணிக படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த ஆண்டு ராம்குமார் பாலகிருஷ்ணன், எம் எஸ் பாஸ்கர், ஜி வி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் முறையே விருதுகளை வென்றுள்ளனர். இந்நிலையில் தேசிய விருதுகள் குறித்து பாடல் ஆசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “தேசியத் திரைப்பட
விருதுகள் சிலவெனினும்
பெற்றவரைக்கும் பெருமைதான்
விருதுகளை வென்ற
கலைக் கண்மணிகள்
இயக்குநர்
ராம்குமார் பாலகிருஷ்ணன்,
தயாரிப்பாளர்கள்
சுதன் சுந்தரம் - கே.எஸ்.சினிஷ்,
சகோதரர் எம்.எஸ்.பாஸ்கர்,
தம்பி ஜி.வி.பிரகாஷ்,
நடிகை ஊர்வசி,
சரவண மருது,
சவுந்தரபாண்டியன்,
மீனாட்சி சோமன்
ஆகிய அனைவர்மீதும்
என் தூரத்துப் பூக்களைத்
தூவி மகிழ்கிறேன்
இந்த மிக்க புகழைத்
தக்கவைத்துக் கொள்வதற்கு
மேலும் உழைப்பதற்கு
இந்த விருதுகள்
ஊக்கமும் பொறுப்பும்
தருமென்று
உறுதியாய் நம்புகிறேன்
ஆயிரம் சொல்லுங்கள்
ஆடுஜீவிதம், அயோத்தி
விருதுபெறாதது
எனக்கு ஏமாற்றம்தான்’ எனத் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்