நடிகர் சிம்பு நடிக்க, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 49வது படமாக அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
'பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், சிம்பு கல்லூரி மாணவராகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்கவிருந்தது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
ஆனால், தற்போது இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருப்பதுதான் என கருதப்படுகிறது. இதனால் படத் தயாரிப்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
அதே சமயம், நடிகர் சந்தானம் தனக்கான நகைச்சுவை காட்சிகளை மாற்றி, நாயகனுக்கு இணையான காட்சிகளை எழுத சொன்னதாகவும், கதாபாத்திர வடிவமைப்பில் சிம்புவுக்கும் சந்தானத்திற்கும் இடையே ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக் காரணங்களால், இந்த படத்திலிருந்து விலகிய சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சிம்புவுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், இப்போது வேறு கதாநாயகர்களிடம் கதை கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.