தயாரிப்பாளர் தில்லி பாபு நினைவேந்தல் கூட்டம்!

J.Durai
திங்கள், 23 செப்டம்பர் 2024 (12:44 IST)
தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது.
 
மறைந்த தில்லி பாபு அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொள்ளும் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில்
நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்கே செல்வமணி பேசியது....... 
 
தில்லி பாபுவை எனக்கு கடந்த ஏழு எட்டு வருடங்களாக தெரியும். என் வீட்டில் தான் அவரது அலுவலகம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எப்போதும் சிரித்த முகத்தோடும் குழந்தைத் தனமாகவும் இருப்பார். என்னுடைய வீட்டில் ஏழெட்டு வருடங்களாக அவரது அலுவலகம் இயங்கி வருகிறது. வெயில், மழை, கொரோனா என எது வந்தாலும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் வாடகை போட்டு விடுவார். எனக்கு மட்டுமல்ல, எல்லோரிடமும் இன்முகத்தோடு இருப்பார். அவரது நல்ல குணங்களை நாம் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நினைவஞ்சலி. வெற்றிப் படம், தோல்விப் படம் என்றில்லாமல் எல்லாப் படங்களுக்கும் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும். மிகச்சிறந்த மனிதர். அவரது புகழ் நிச்சயம் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும்” என்றார். 
 
அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசுகையில்......
 
தில்லி பாபு சார் மிகவும் நல்ல மனிதர். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகதான் இருந்திருக்கிறார். அவருக்குப் பின் அவரது தயாரிப்பு நிறுவனம் இதே புகழோடும் நற்பெயரோடும் இருக்க நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். தேவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.
 
நடிகர் முனீஷ்காந்த் பேசுகையில்......
 
ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கம்பெனி ஆர்டிஸ்ட் போல நான். அவர்கள் தயாரிப்பில் பல படங்களில் நடித்திருக்கிறேன். நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றார்.
 
இயக்குநர் ராம்குமார் பேசியது.....
 
என்னுடைய ‘ராட்சசன்’ கதையை 35 பேர் நிராகரித்தார்கள். எனக்கு சினிமா மேல் வெறுப்பே வந்துவிட்டது. 36ஆவது நபராகதான் டில்லி பாபு சாரிடம் கதை சொன்னேன். கேட்டவுடன் உடனே ஒத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தார். 35 பேர் நிராகரித்தார்கள் என்றாலும் அவர் என் மேல் சந்தேகப்படாமல் நம்பிக்கை வைத்தார். பல விதங்களில் எனக்கு நம்பிக்கைக் கொடுத்தார். நம் மேல் நம்பிக்கை வைக்கும் நபர்கள் கிடைப்பது கஷ்டம். அப்படியான ஒருவரை நான் இழந்திருப்பது பெரும் இழப்பு. அவரை இந்த சமயத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன் என்றார்.
 
தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது..... 
 
’ஓ மை கடவுளே’ படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஸ்கிரிப்டை கேட்ட ஒரே வாரத்தில் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டார். தொலைநோக்கு பார்வை மற்றும் மிகப் பெரும் கனவுகள் கொண்ட மனிதர் அவர். அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்றார். 
 
நடிகர் அசோக் செல்வன் பேசும்போது......
 
தில்லி பாபு சார் என் கரியருக்கு புத்துயிர் கொடுத்தார். அவர் என்னையும் என் சகோதரியையும் மிகவும் அக்கறையுடன் வழிநடத்தினார். ’ஓ மை கடவுளே’ படம் வெளியாவதற்கு முன்பு வரை எனக்கு இண்டஸ்ட்ரியில் மார்க்கெட் இருந்ததில்லை. இருந்தாலும் அவர் எனக்காக பணம் கொடுத்தார். அவர் கொடுத்த பாதையில்தான் நான் அதில் பயணிக்கிறேன். அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார்.
 
மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பேசுகையில்......
 
’வளையம்’ படத்தின் தொடக்கத்தின்போது இது ஆக்ஸஸின் 25ஆவது பட விழாவா அல்லது தில்லி பாபு சாரின் ஐம்பதாவது  பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டுமா என்று நிறைய பேசினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இங்கு நான் நிற்பது வருத்தமளிக்கிறது. திரைத்துறையில் வேலை பாதுகாப்பு எப்போதுமே ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. ஆனால், அவர் நான் உட்பட யாருடனும் அவர் ஒப்பந்தத்தை மீறாமல் பார்த்துக் கொண்டார். வருங்காலத்தில் இந்தத் தயாரிப்பு நிறுவனத்திற்கு எப்போதும் உதவ தயாராக இருக்கிறேன் என்றார். 
 
நடிகை நிக்கி கல்ராணி பேசியது.......
 
இந்த மாதம் ‘மரகத நாணயம்2’ தொடங்குவதாக இருந்தோம். இதுபோன்ற சமயத்தில் இவரது இழப்பு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தில்லி பாபு சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் தயாரிப்பு நிறுவனம் சரியாக இயங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பூர்னேஷூக்கு கொடுத்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”.
 
நடிகர் ஆதி பேசியது......
 
தில்லி பாபு சார் ஸ்மார்ட் பிசினஸ் மேன். ஆனால், அந்த ஸ்மார்ட்னஸை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார். குறுகிய காலத்திலேயே அவர் பல நல்ல படங்களைத் தயாரித்தார். ஆனால், எப்போதும் அவர் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்ததில்லை. பல இயக்குநர்களுக்கு அவர் முன் மாதிரி. அவர் தயாரித்த நல்ல படங்கள் அவரது பெயர் சொல்லும் என்றார்.
 
நடிகர் தேவ் பேசியது.......
 
தில்லி பாபு அங்கிள் தான் எங்களுக்கு வழிகாட்டி. நான் சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பியபோது அவர் எனக்கு சிறந்த சூழலை அமைத்துக் கொடுத்தார். அவரது மரியாதை மற்றும் அவர் சம்பாதித்திருக்கும் இந்த அன்பை தக்க வைக்க இன்னும் கடுமையாக உழைப்பேன். அவரது நினைவை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்