96 என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம்குமார் 96 படத்தின் திரைக்கதையை தான் இந்தியில் எடுப்பதற்காகதான் எழுதியதாகக் கூறியுள்ளார்.
அதில் “96 படத்தை இந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் அப்போது என்னால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இப்போது வாய்ப்புக் கிடைத்தால் 96 மற்றும் மெய்யழகன் ஆகிய இரு படங்களையுமே நான் இந்தியில் ரீமேக் செய்வேன். தென்னிந்திய மொழிகளைப் போல இல்லாமல் இந்தியில் ஒரு படத்தை எடுத்தால் பல மாநிலங்களை நாம் சென்றடைய முடியும்” எனக் கூறியுள்ளார்.