96 என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் பிரேம்குமார் திரைக்கதை முடிந்ததும் விஜய் சேதுபதியிடம் கொடுத்ததாகவும், அதைப் படித்த அவர் திரைக்கதையில் திருப்தி இல்லை என்று சொன்னதாகவும் தகவல்கள் பரவின.
இதனால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேம்குமார் “96 இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை முடித்துவிட்டேன். விரைவில் படப்பிடிப்புத் தொடங்கும்” எனக் கூறியுள்ளார். இதனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.