அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
வசூலில் பெரிய அளவில் சாதித்து வரும் இந்த படம் தமிழக அளவில் மட்டும் இன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த படம் விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டும் என்றும் மேலும் 250 கோடி ரூபாய்க்கு மேலாக திரையரங்குகள் மூலமாக எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் குட் பேட் அக்லி வெற்றி அஜித்துக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இதையடுத்து அவரின் அடுத்த படங்களைத் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடுவதாக சொல்லப்படுகிறது. இதில் குட் பேட் அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், விஜய்யின் ஜனநாயகன் படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், டாவ்ன் பிக்சர்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களும் அடக்கம் என்று சொல்லப்படுகிறது.