பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி, அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தற்போது 85 வயதாகும் நிலையில், திடீரென உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கே.ஜே. யேசுதாஸ் அவர்களுக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இன்னும் ஒரு சில நாட்கள் அவருக்கு சிகிச்சை வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்பட 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய யேசுதாஸ் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். மேலும், அவர் 8 தேசிய விருதுகளை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திரை உலகில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தனது காந்த குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் என்பதால், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.