தனது தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மார்கெட் உயர்ந்த போது, அவரிடம் மூன்று சினிமா நிறுவனங்கள் கால்ஷீட் கேட்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் படம் செய்து கொடுப்பதாக சிவகார்த்திகேயன் ஒத்துக் கொண்டதாகவும், ஆனால் தற்போது அவர் அதை மறுப்பதாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது.
அந்த மூன்று நிறுவனங்களில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் மட்டுமே சம்பளத்துக்கான முன்பணம் பெற்றுக் கொண்டேன். மற்ற இரு நிறுவனங்களிடம் வாய்மொழியாக மட்டுமே பேசினேன், முன்பணம் எதுவும் வாங்கவில்லை, அதனால் அவர்களுக்கு படம் நடித்துத்தர முடியாது என சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.
ஆனால், தன்னை நடிக்க சொல்லி வற்புறுத்துவதாகவும், தன்னை வேலை செய்ய விடுங்க என்று ரெமோ பட விழாவில் சிவகார்த்திகேயன் அழுததும் நடந்தது.
இந்நிலையில், தங்களின் படங்களில் நடிக்காத சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தரக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் சினிமா தொழிலாளர் அமைப்பான பெப்ஸியை கேட்டுக் கொண்டது. ஆனால், பெப்சி அதை ஏற்கவில்லை.
தற்போது சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரின் வாட்ஸ் அப் குழு ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில் ‘ நியாயம் கிடைக்கும் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து, நான்கு வருடங்களாக காத்திருந்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தற்போது தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. என் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி தமிழ் சினிமா திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.