நடிகை கஸ்தூரி சர்ச்சை டுவீட்: மாட்டிறைச்சி விருந்து வைத்தது தவறு!

Webdunia
புதன், 31 மே 2017 (12:03 IST)
மட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.


 
 
ஆனால் தமிழக அரசு வாய் மூடி மௌனியாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் இதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது. தமிழக அரசோ மத்திய அரசை ஆதரிக்கும் விதமாக அமைதியாக இருக்கிறது. இந்நிலையில் இதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.
 
ஆனால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ் நேற்று மாலை ஐஐடி வளாகத்திலேயே கடுமையாக தாக்கப்பட்டார். பீகாரை சேர்ந்த வலது சாரி அமைப்பை சேர்ந்த மணீஷ் என்ற மாணவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்த்து இது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியுள்ளார் அவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது டுவிட்டரில், மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தியது தவறான சிந்தனை. அது மற்றவர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் இருந்ததால் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
 
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யக்கூடாது என தடை விதித்ததை நான் எதிர்க்கிறேன், ஆனால் என்னுடைய உணவு பழக்கம் என்னை சுற்றியிருப்பவருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்க கூடாது. மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை. முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது, மாணவர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்