இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

Prasanth Karthick

வியாழன், 15 மே 2025 (11:49 IST)

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சிறுவன் வரவேற்ற விதம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 

தமிழ்நாட்டிற்கென தனிப்பெரும் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் உள்ள நிலையில் பல வெளிநாட்டு பயணிகளும் தமிழக வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளை காண வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறாக வரும் வெளிநாட்டு பயணிகள் தற்போது சர்வ சாதாரணமாக வீதிகளில் இறங்கி மக்களோடு செல்லும்போது மக்களின் அன்பையும், வரவேற்பையும் கண்டு வியந்து போகின்றனர். அவ்வாறாக தற்போது தனக்கு நடந்த சம்பவத்தை வெளிநாட்டு பயணி ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

 

Daily Max என்ற யூட்யூபர் சமீபத்தில் சென்னையை சுற்றிப்பார்க்க வந்துள்ளார். சென்னையில் உள்ளூர் மக்கள் சாப்பிடும் உணவு வகைகளை சுவைத்து பார்க்க விரும்பிய அவர் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு சிறுவனை பார்த்துள்ளார். அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பாதாம் பால் கடைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளான். அந்த வெளிநாட்டு பயணி, சிறுவனுக்கு பாதாம் பால் வாங்கி தருவதாக கூற, அதற்கு அந்த சிறுவன் “இல்லை.. நீங்கள் எங்கள் நாட்டிற்கு வந்துள்ள விருந்தினர். நாங்கள்தான் உங்களை உபசரிக்க வேண்டும். நான் உங்களுக்கு வாங்கி தர விரும்புகிறேன்” என்கிறார்.

 

அதன்பின்னர் இருவரும் அந்த கடையில் சென்று பாதாம் பால் அருந்தும்போதும் சிறுவன் தனக்கான தொகையை கொடுத்துவிட்டார். கடைக்காரரும் சரியான தொகையையே வெளிநாட்டு பயணியிடம் பெற்றுக் கொண்டார். இந்த மக்களின் விருந்தோம்பல் வியக்க வைப்பதாக இருக்கிறது என அந்த வெளிநாட்டு பயணி ஆச்சர்யம் தெரிவித்துள்ள நிலையில், தமிழர்களின் சிறப்பே அவர்களது விருந்தோம்பல் பண்புதான் என அவரது வீடியோ பதிவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்