சுவாதி வழக்கில் சட்டவிரோதமாக பேசியிருந்தால் என்னை கைது செய்யலாம் : திருமாவளவன்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (14:19 IST)
சுவாதி படுகொலை தொடர்பாக, சட்டவிரோதமான கருத்தை நான் கூறியிருந்தால், என்னை கைது செய்யட்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொ.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
சுவாதிக்கும், அவருடைய நண்பர் என்று கூறப்பட்ட பிலால் மாலிக் என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதற்காக, சுவாதி மதம் மாற தயாராக இருந்துள்ளார். எனவே அவர் ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என திருமாவளவன் கூறியிருந்தார்.
 
ஆனால், சுவாதியை நேசித்த முஸ்லீம் நண்பர், இந்து மதத்திற்கு மாற தயாராக இருந்ததால், இந்த கொலை நடந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். அதை மறைப்பதற்காக, திருமாவளவன் இப்படி கூறுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குண்டு வீசினார்.  மேலும், திருமாவளவனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
 
அதேபோல், தவறான கருத்துக்களை கூறி வரும் திருமா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு பெண்கள் அமைப்பும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன் “ சட்டத்திற்கு விரோதமாக எந்த கருத்தும் கூறவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் காயப்படுத்தும் நோக்கமும் எனக்கில்லை. ராம்குமார் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று ஹெ.ராஜாவே கூறியிருந்தார்.
 
ராம்குமார் கைது பற்றி, ஹெ.ராஜா, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ராமராஜ் ஆகியோர் சந்தேகத்தை ஏற்கனவே எழுப்பியுள்ளனர். சுவாதி படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிதான் முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. வேறு எந்த கட்சியும் அதை செய்யவில்லை.
 
இப்போது என்னை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சுவாதியின் குடும்பத்திற்கு களங்க விளைவிக்கும் நோக்கமும் எனக்கில்லை.  நான் சட்டவிரோதமாக எதாவது கூறியிருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்” என்று அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்