தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, பிரதமர் மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக நன்றி- அண்ணாமலை

Webdunia
புதன், 24 மே 2023 (14:34 IST)
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதல் பிரதமர் ஆன நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் பிரதமர் மோடியிடம்  வழங்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது தமிழகத்தின் சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடி இடம் அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்த   நிலையில்,   தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, பிரதமர் மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக நன்றி என்று தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

நமது நாடு சுதந்திரமடைந்த போது, ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில், “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்”என்ற தேவார திருப்பதிகத்தைப் பாடி, தமிழகத்தைச் சேர்ந்த அருள்மிகு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், பண்டித நேரு அவர்களிடம் சோழ மன்னர்கள் பயன்படுத்தியதைப் போன்ற செங்கோலை வழங்கினார்.

தமிழ் மன்னர்கள் ஆட்சியின் முக்கிய அங்கமாக விளங்கிய செங்கோலின் முக்கியத்துவம் குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.

ஆனால், அதற்குப் பிறகு, அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்ட செங்கோல், தற்போது நமது மாண்புமிகு பிரதமர் திரு  நரேந்திர மோடி அவர்களின், நமது பாரத கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியால், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
 

புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த செங்கோல் இடம்பெறும்.

தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்