ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இஸ்ரேலை "நீண்ட காலமாகவே ஒரு ரவுடி நாடு" என்று வர்ணித்துள்ளார். உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த தன்னிச்சையான செயலை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் நோக்கில், அதன் அணுசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் அதிகாலை வான்வழித் தாக்குதலை தொடுத்தது. இத்தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பரஸ்பர தாக்குதல்களில், ஈரானில் 78 பேரும், இஸ்ரேலில் 3 பேரும் உயிரிழந்தனர்.