ஆசியக் கோப்பை தொடரில் தோல்வியேக் காணாமல் இந்திய அணி இம்முறை தொடரை வென்றுள்ளது. நேற்று முன்தினம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.
ஆனால் வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய அணி முடிவெடுத்ததால் கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியது. அதே போல பாகிஸ்தான் அணிக் கேப்டன் சல்மான் அலி ஆஹாவும் ரவி சாஸ்திரியிடம் போட்டிக்குப் பிந்தைய உரையாடலில் கலந்துகொள்ள மறுத்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முக்கியமானப் போட்டிகளின் போது அழுத்தத்தை எப்படி எதிர்கொள்கிறார் எனப் பேசியுள்ளார். இது குறித்து “நான் முக்கியமான போட்டிகளில் ரோஹித் ஷர்மா எப்படி மற்றவர்களின் கருத்துகளைக் கையாளுகிறார் என அவர் மனைவி ரித்திகாவிடம் கேட்டேன். அவர் முக்கியமான போட்டிகளில் அவர் சமூகவலைதளங்களில் இருந்து முழுவதுமாக விலகிவிடுவார் எனக் கூறினார். அதையேதான் நான் பின்பற்றுகிறேன்” எனக் கூறியுள்ளார்.