அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

Mahendran

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (10:18 IST)
அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான ஆர்.சந்திரசேகர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
அன்புக்கும் போற்றுதலுக்கும்  உரிய அனைத்திந்திய அண்ணா திமுக நண்பர்களுக்கும் பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்...அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். 
 
கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன்.கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன். அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்புகளின்றி பணியாற்றி இருக்கிறேன். 
 
மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன்.கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே...தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது.
 
எனவே கட்சியின் அனைத்துவித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன்.‌கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன். கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள்,மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். பிரிய மனமின்றி பிரிகிறேன். என்னை வாழ வைத்த அதிமுகவின் அன்பிற்கு என்றும் நான் அடையாளமாக இருப்பேன் என கூறியுள்ளார் 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்