சசிகலா அதிமுகவின் தலைமையை ஏற்க நிர்வாகிகள் கோரிக்கை

Webdunia
சனி, 10 டிசம்பர் 2016 (15:29 IST)
அதிமுகவின் தலைமையை ஏற்குமாறு சசிகலாவிடம் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயா தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக நிர்வாகிகள் சின்னம்மா சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவிற்கு தலைமை ஏற்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. 
 
ஜெயா தொலைக்காட்சியில் வெளியான செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
 
அதிமுகவுக்கு அரணாக இருந்து பாதுகாக்குமாறு தொண்டர்கள் கோருவதாக தகவல். கழகத்தின் மையப்புள்ளியாக செயல்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல். மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல். ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்த அதிமுக மூத்த நிர்வாகிகள் வேண்டுகோள். சசிகலாவை போயஸ் தோட்டத்தில் நேரில் சந்திந்து அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை. மேலும் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-
 
அவர் அம்மாவுடன் கூடவே இருந்தவர். அம்மாவின் எண்ணங்கள் கூட அறிந்தவர். அம்மா என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்பது அவருக்கு தெரியும். அதனால் நாங்கள் அவரிடம் சென்று அதிமுகவின் தலைமையை ஏற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சிக்கு ஒரு தலைமை வேண்டும். விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றார்.

பல அதிமுக நிர்வாகிகள் சசிகலா பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.  
அடுத்த கட்டுரையில்