ராஜிவ் கொலை வழக்கு : 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (02:56 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடுத்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், ராபர்ட்பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது.
 
இதில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் 11 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டதையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
 
மேலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அரசு முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
 
இதையடுத்து இவ்வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
சிபிஐ விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனைகளைக் கைதிகளை மாநில அரசு விடுவிப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என தீர்ப்பளிக்கப்பட்டது.
 
அதே நேரத்தில் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் சாசன அமர்வு முன்பு திங்களன்று விசாரணை நடைபெற்றது.
 
அப்போது, இவ்வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்