வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தக்காளி வரத்து குறையத் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தக்காளி விவசாயம் நடந்து வந்தாலும், தேவைக்கு மேலும் அதிகமான தக்காளி ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில காலமாக வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் தக்காளி, வரத்து குறையத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.50 க்கு விற்பனையாகி வந்த தக்காளி இன்று ரூ10 உயர்ந்து ரூ.60 ஆக விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் ரூ.20 முதல் ரூ.30க்கு விற்பனையாகி வந்த தக்காளி விலை தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் தக்காளி விலை ரூ.100 வரை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K