ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

Siva

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (18:03 IST)
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசித்தி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் அடங்குவர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்தில், 220-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்த மேக வெடிப்பு, மாச்சில் மாதா யாத்திரை செல்லும் பாதையில் நிகழ்ந்ததால், யாத்திரை சென்ற பக்தர்களும் சிக்கியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து வெளியான காணொளிகள், யாத்திரை சென்ற பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்படுவதையும், திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் காண்பிக்கின்றன. 
 
பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் "கிஷ்த்வாரில் மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உண்டு என கூறியுள்ளார். மேலும் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று பிரதமர் உறுதியளித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்