கொலை வழக்கில் தனக்கு தொடர்பா? பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் விளக்கம்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (13:46 IST)
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக உயிரழந்த வாலிபரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.


 
 
சேலம் மாவட்டம் பெரிய வடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது காரின் மீது கடந்த சனிக்கிழமை சதீஷ்குமார் என்ற வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மோதியதில் அவரது கார் கைப்பிடி உடைந்தது. இதனால் சதீஷ் குமாரிடம் மாரியப்பன் உடன் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனையடுத்து சதீஷ் குமார் காணாமல் போயுள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை அவரை ரயில்வே டிராக் புதரின் அருகில் பிணமாக கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சதீஷ்குமார் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்தாரா? ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அவரது மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சதீஷ்குமாரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மாரியப்பனிடம் விசாரணை நடத்த வேண்டும் என சதீஷ்குமாரின் பெற்றோர்களும், உறவினர்களும் கோரிக்கைவைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மாரியப்பன் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
 
இதுகுறித்து மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சதீஷ்குமார் என்ற இளைஞர் குடிபோதையில் பைக்கில் வந்து எனது கார் மீது மோதினார். இதில் கார் சேதம் அடைந்தது குறித்து சதீஷ்குமாரின் பெற்றோரிடம் தெரிவித்தோம்.
 
ஆனால் தற்போது சதீஷ்குமாரின் மரணத்தில் என்னைத் தொடர்புபடுத்தி அவரது தற்கொலையைப் பயன்படுத்தி சிலர் அவதூறு பரப்ப முயல்கின்றனர். இதில் என்னை சிக்கவைத்து பணம் பறிக்க முயற்சி நடக்கிறது என பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார் மாரியப்பன்.
அடுத்த கட்டுரையில்