சசியை வெளியே எடுக்காமல் லண்டன் செல்லமாட்டேன்: அடம்பிடிக்கும் நடராஜன்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (12:17 IST)
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வெளியே எடுக்க அவரது குடும்பத்தினர் படாதபாடுபட்டு வருகின்றனர். அதிலும் சசிகலாவின் கணவர் நடராஜன் அதிகமகவே மெனக்கெட்டு வருகிறார்.


 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் சசிகலாவை வெளியே கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சிறை வாசலில் சசிகலாவை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த நடராஜன் அன்று முதல் சசிகலாவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரின் மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜூலை முதல் வாரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காகவே காத்திருக்கிறார் சசிகலாவின் கணவர் நடராஜன்.
 
வழக்கறிஞர்களையும் இதற்காக நடராஜன் சந்தித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே நடராஜன் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
 
தனது உடல்நிலை சரியில்லாததால் அதனை சரி செய்ய நடராஜன் லண்டன் சென்று சிகிச்சை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சசிகலாவின் மறுசீராய்வு மனு மீதான முடிவு தெரியாமல் லண்டன் செல்ல மாட்டேன் என தனது லண்டன் பயணத்தை தள்ளிப்போட்டு வருகிறார் நடராஜன்.
 
நடராஜனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் கடந்த மே மாதமே லண்டன் சென்று தனது சிகிச்சையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் நடராஜன் சசிகலாவுக்கு விடுதலை வாங்கி கொடுத்த பின்னர் தான் லண்டன் பயணத்தில் கவனம் செலுத்துவேன் என கூறுகிறாராம்.
அடுத்த கட்டுரையில்