பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

Mahendran
சனி, 28 செப்டம்பர் 2024 (08:59 IST)
கோவையைச் சேர்ந்த 108 வயது பாப்பம்மாள் பாட்டி காலமானார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
கோவையை சேர்ந்த 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி, கணவர் இறந்த பிறகு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொண்டு இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வந்தார் என்பதும் கடைசி மூச்சு வரை அவர் இயற்கை விவசாயத்தை செய்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம விருது வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியது. இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக பாப்பம்மாள் பாட்டி நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
மோடி: பாப்பம்மாள் ஜியின் மறைவுக்கு நான் மிகுந்த துயரமடைகிறேன். வேளாண்மை, குறிப்பாக இயற்கை சாகுபடியில், அவர் தனக்கான தனிப்பட்ட முத்திரையை பதித்தார். அவருடைய பணிவு மற்றும் அன்பான தன்மைக்கு மக்கள் பெரிதும் மதித்தார்கள். அவருடைய குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுடன் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.
 
உதயநிதி ஸ்டாலின்: கழகம் தொடங்கிய காலத்திலேயே உறுப்பினராகி, கழக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவில், பெரியார் விருது பெற்ற கோவை தேக்கம்பட்டியைச் சேர்ந்த கழக மூத்த முன்னோடி பாப்பம்மாள் பாட்டி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம்.
 
கழகத்தின் 15 மாநில மாநாடுகளில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி அனைத்து போராட்டங்களிலும் களம் கண்டவர்.
 
நீட் விலக்கை வலியுறுத்தி கடந்தாண்டு நம் இளைஞரணி நடத்திய கையெழுத்து இயக்கம் வரை கொள்கை உறுதியோடு களத்தில் நின்ற பாப்பம்மாள் பாட்டியின் அர்ப்பணிப்பு, போற்றுதலுக்குரியது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
 
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கமல்ஹாசன்: இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன. 
 
அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்