கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்துடன் செயல்படுகிறார்; டி.டி.வி. தினகரன் கருத்து

Siva

ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:24 IST)
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டினார்.
 
கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், நிதானமாகவும் பொறுப்புடனும் செயல்படுவதாக குறிப்பிட்ட டி.டி.வி. தினகரன் ’ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோதும், கூட்டணி கட்சிகள் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தியபோதும் முதல்வர் ஸ்டாலின் அதையெல்லாம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் முதல்வருக்கு இல்லை என்பது தெளிவாகிறது" என்று கூறினார்.
 
41 உயிர்கள் அநியாயமாக போயுள்ளன. இதில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, கைது நடவடிக்கை எடுப்பது ஆகியவை அரசுக்கு இருக்கும் அவசியமான கடமை. நான் அரசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம்; நடுநிலையாக பார்க்கும்போது அனைத்தும் சரியாகவே நடக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் தவெக கூட்டத்தில் நடந்த நெரிசல் ஒரு விபத்துதான் என்றும், திட்டமிட்ட செயல் அல்ல என்று கூறிய தினகரன்  ‘த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதில் அனுபவம் குறைவு என்பதால், இதுபோன்ற துயரச் சம்பவம் நடந்துள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
 
கரூர் துயரத்திற்கு தார்மீக பொறுப்பை விஜய் ஏற்றுக்கொண்டு இருந்தால், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்திருக்காது. ஆனால், "தம்மீது பழி வந்துவிடும்" என அவரது ஆலோசகர்களோ அல்லது வழக்கறிஞர்களோ அறிவுறுத்தியதால்தான் விஜய் அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்