கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

Mahendran

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (16:54 IST)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில், சுமார் ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகளுக்கு இடையே தடுப்பு சுவர்கள் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மாணவ மாணவிகள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட இந்த கழிப்பறை வளாகம் நேற்று  பாமக பேரூராட்சி சேர்மன் ம.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு பிறகு, உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 20 சிறுநீர் கழிக்கும் பேசின்களுக்கு இடையே எந்தவிதத் தடுப்புகளும் இல்லாமல் திறந்தவெளி அமைப்பில் இருந்தது கண்டறியப்பட்டு, அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
 
இந்த அடிப்படை குறைபாடு குறித்து பொதுமக்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தை பற்றிக் கேள்வி எழுப்பினர்.
 
இது குறித்துச் சேர்மன் ம.க. ஸ்டாலின் விளக்கமளிக்கையில், "அதிகாரிகள் தயாரித்த திட்ட மதிப்பீட்டு ப்ளானிலேயே தடுப்புச்சுவர் அமைப்பதற்கான ஏற்பாடு இல்லை. அதன்படியே ஒப்பந்ததாரர் கட்டியுள்ளார். மற்ற பள்ளிகளிலும் சிறுநீர் கழிப்பறைக்குத் தடுப்பு இல்லை என்கிறார்கள். தடுப்புகள் அமைக்க மீண்டும் நிதி ஒதுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
 
ஆனால், ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்டும், தனிமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்டப்பட்ட இந்தக் கழிப்பறை, அப்பகுதியில் கடுமையான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்