நில அபகரிப்பு வழக்கு.! எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!

Senthil Velan

வெள்ளி, 19 ஜூலை 2024 (17:04 IST)
நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மற்றொரு வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரை மிரட்டியதாக கடந்த மாதம் 9ம் தேதி மேலும் ஒரு வழக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதியப்பட்டது. 

இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து விஜயபாஸ்கர் தலைமறைவானார். இந்த நிலையில் 35 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கடந்த 16ம் தேதி கேரள மாநிலம் திருசூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 
 
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது மிரட்டல் வழக்கில் வாங்கல் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டார்கள். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆஜர் படுத்தப்பட்டார்.

ALSO READ: இனிமேல் சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு இல்லை.! எப்போது தெரியுமா.?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயபாஸ்கருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்