தமிழ்நாட்டு பேரையே கருணாநிதி நாடுன்னு மாத்துவாங்க! – ஜெயக்குமார் கண்டனம்!

திங்கள், 2 மே 2022 (12:15 IST)
தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களை தற்போதைய திமுக அரசு மூடி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைத்த நிலையில் மாநிலம் முழுவதும் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

சென்னையில் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு முக்கிய நகரங்கள், ஊராட்சி பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஆட்சியமைத்துள்ள திமுக அரசு அம்மா உணவகத்தை போன்று மாநிலம் முழுவதும் கலைஞர் உணவகமும் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அம்மா உணவகங்களை மூட தமிழக அரசு முயற்சித்து வருவதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு தமிழக அரசு கலைஞர் பெயர் சூட்டியுள்ளது.

இதை விமர்சித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “கூடிய விரைவில் தமிழ்நாட்டின் பெயரே கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம். தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகங்களை குறைத்து கலைஞர் உணவகத்தை அதிகரிக்க அரசு முயன்று வருகிறது. பொதுமக்களே அரசின் இந்த செயலை விரும்ப மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்