சேகர் ரெட்டி வீட்டில் 2வது நாளாக இன்றும் சோதனை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (11:43 IST)
மக்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார்.  


 

 
இதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும், வங்கி அதிகாரிகள் மற்றும் பணத்தை மாற்றித்தரும் ஏஜெண்டுகள் மூலம் தங்களிடம் இருந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியில் இறங்கினர். 
 
எனவே, கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், சென்னையில் தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 8 இடங்களில் சில தொழிலதிபர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 
 
அப்போது சேகர் ரெட்டி என்ற தொழிலதிபர் வீட்டில் ரூ.105 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது. அதில், ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 123 கிலோ தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்த சேகர் ரெட்டி ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
 
புதிய ரூபாய் நோட்டுகளை பெற வங்கிகள் இவ்வளவு கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில், சேகர் ரெட்டி எப்படி இத்தனை கோடி ரூபாய் புதிய நோட்டுகளாக மாற்றினார் என வருமான வரித்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
அவரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு சிலர் அவருக்கு புதிய நோட்டுகளை மாற்றித்தந்தது தெரியவந்துள்ளது. அதில், தமிழக அரசின் சில உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சேகர் ரெட்டியின் சென்னை வீடு மட்டுமில்லாமல், வேலூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எனவே இன்னும் பல கோடிகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்