சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் தனது மனுவில், சென்னை மாநகரில் சில நாய் உரிமையாளர்கள், தங்களது ஆக்ரோஷமான வெளிநாட்டு வகையை சேர்ந்த நாய்களுக்கு முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் அழைத்து செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால், ராட்வைலர் போன்ற நாய்கள் கடித்து சிறுவர்கள், முதியவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுபோன்ற நாய்களை தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் அறிக்கையில், சென்னையில் நாய் வளர்ப்பவர்கள் உரிய சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது மாநகரில் 1,80,157 நாய்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், நாய்க்கடி சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரம் நாய்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.