வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

J.Durai
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (19:51 IST)
வனக்கல்லூரியில்  நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் 12 மண்டல வனத்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முன்னதாக விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டது.  மேலும் இந்த ஆண்டில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் அவர்கள் வென்ற பரிசுகள் மற்றும் கோப்பைகளை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர். 
 
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்......
 
இந்த விளையாட்டு போட்டிகள் என்பது முக்கியமான ஒன்றாகும், விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள அண்ணன்(உதயநிதி ஸ்டாலின்) பொறுப்பேற்ற பிறகு நம் மாநிலத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.  தமிழ்நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் போட்டி, கேலோ இந்தியா போட்டிகள், ஃபார்முலா ஃபோர் கார் பந்தயம், நீர் சருக்கு விளையாட்டுகள் ஆகியவை தமிழ்நாட்டில் நடத்தி பெருமை சேர்த்திருக்கிறார். பாரிஸில் பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மாரியப்பன் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் எட்டாவது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது.
 
இந் நிலையில் 28 வது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற தமிழக வனத்துறை விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பில் தங்கம் வென்ற வீரர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வெள்ளி பதக்கம் என்ற வீரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வெண்கல பதக்கம் வென்ற வீரர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை உயர்த்தி வழங்குவதற்கான கோரிக்கை வர பெற்றுள்ளதை முன்னிட்டு இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த கோரிக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2022 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை 920.52 கோடி ஜப்பான் நாட்டு நிதி உதவி செலவில் தமிழ்நாடு உயிர் பன்மையியல் பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் அகழிகள், செயற்கை நுண்ணறிவு கருவிகள், செயற்கை தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டு கோவை பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் யானை உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.  
 
மனித வன விலங்கு மோதல்கள் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் மூலமாக தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 23.76 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு 260 கோடி நாட்டு மரங்களை நட்டு கால சூழ்நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு பல்வேறு இயக்கங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக திண்டுக்கல் கரூர் மாவட்டங்களுக்கு இடையே தேவாங்கு சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது, ஈரோடு மாவட்டத்தில் பெரியார் வன சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது,  தமிழ்நாட்டின் மாநில வனவிலங்கான வரையாடுகளுக்காக நீலகிரி வரையாடு திட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலையில் சூழல் திட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் அரிய தாவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் 10 கோடி மதிப்பில் விதை பெட்டகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற உள்ள மாநில அளவிலான வனத்துறை போட்டியில் விளையாட்டு வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 
 
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-20ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற உள்ள 27 வது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடுவதற்கு வாழ்த்துக்கள் என கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்