கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டி சென்ற அபிநந்தனின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது, பாராசூட் மூலம் வெளியே குதித்த அபிநந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். அப்போது அவரை பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர்தான் கைது செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை அடுத்து, சிறைபிடிக்கப்பட்ட 58 மணி நேரத்தில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில், தீவிரவாத அமைப்பு ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில், அபிநந்தனை கைது செய்த மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உட்பட இருவர் சுட்டு கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.