நீங்க எப்படி ஜெயிக்கிறீங்கன்னு பார்த்துடுறேன்: களையெடுத்த ஸ்டாலின்

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (12:28 IST)
நிர்வாகிகளை அடிக்கடி மற்றி அதிரடி நடவடிக்கை எடுக்கும் அதிமுகவை போல் தற்போது திமுகவும் பல அதிரடி களையெடுக்கும் பணியை ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதன் ஒரு கட்டம் தான் சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்.


 
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பலம் வாய்ந்த எதிர்கட்சியாக திமுக உருவெடுத்தாலும், ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் தோல்வி குறித்து திமுக ஆலோசித்து பல தொகுதிகளில் கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்த கருப்பு ஆடுகள் பட்டியலை தயாரித்துள்ளனர்.
 
இதில் சமீபத்தில் நடந்த களையெடுக்கும் பணியில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரான காந்தி செல்வனின் பதவி பறிக்கப்பட்டது. காந்தி செல்வன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும் அவர் கட்சி வேட்பாளர் தோல்வியடைய உள்குத்து வேலையில் ஈடுபட்டதால் அவர் மீதும் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
 
ராசிபுரத்தில் போட்டியிட்ட வி.பி.துரைசாமியிடம் நீங்க எப்படி ஜெயிக்கிறீங்கன்னு நானும் பார்த்துடுறேன் என்று காந்தி செல்வன் நேரடியாக சவால்விட்டதாகவும், துரைசாமிக்கு எதிராக வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் தன்னை மீறி யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட பார் இளங்கோவனுக்கு எதிராகவும் காந்தி செல்வன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
 
காந்தி செல்வன் குறித்த புகாரை பார் இளங்கோவன் தான் அனுப்பியதாக பேசப்படுகிறது. இதனையடுத்து மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கைக்கு பின்னர் தற்போது காந்தி செல்வன் வகித்த பதவியை வகிப்பது பார் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்