தமிழக அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நொண்டி, கூன், குருடு என்று பேசியது மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பது போன்று என அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் இணைந்து வெளியிட்ட செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது:
கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சிகளை நொண்டி, கூன், குருடு என விமா்சித்துள்ளாா். மூத்த அமைச்சரான அவரது இந்தப் பேச்சு, மாற்றுத் திறனாளிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யாரும் எந்த வகையிலும் ஊனம் கிடையாது என்பதை உணா்த்தும் வகையில், ஊனமுற்றோா் நலத் துறையின் பெயரையே மாற்றுத் திறனாளிகள் நலத் துறை என மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மாற்றினாா்.மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தன் வசமே அவா் வைத்து இருந்தாா்.
அவரது வழியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தானே நிா்வகித்து வருகிறாா்.இந்த நிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான துரைமுருகன், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் கேலியாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு, அவா் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.